கொட்டித் தீர்க்கும் மழை.. வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கோவை வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் இன்று அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 14.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
4 நாட்களாக கனமழை
வால்பாறையை அடுத்த சின்னகல்லாரியில் கடந்த 24 மணி நேரத்தில் 14.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 4வது நாளாக மழை தொடர்கிறது.
பள்ளி விடுமுறை
இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர், இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். கனமழை பொழியும் பகுதிகளுக்கு மட்டுமே அது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியிலும் விடுமுறை
இதே போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பெய்து வரும் கனமழையை அடுத்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜன் சிங் சவன் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
படகு போக்குவரத்து நிறுத்தம்
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.