கோடை மழை இடியோடு பெய்யும் கூலா அனுபவிங்க மக்களே - வானிலையின் ஜில் அறிவிப்பு
தமிழகம் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு இடியோடு கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சித்திரை மாதம் பிறந்து விட்டது கத்திரி வெயிலுக்கு முன்பே வெப்பம் தகித்தாலும் ஆங்காங்கே கோடை மழையும் கொட்டி வருகிறது.
தென்மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. கோடைக்கு இதமாக பலரும் அருவி நகரங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் தமிழக மீனவர்கள் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
மேற்கு தொடர்ச்சி மழைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே அணைக்கு வரும் நீரின் அளவு 225 கன அடியில் இருந்து 2,320 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 113.60 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையில் இருந்து, 225 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இன்னும் சீசன் காலம் தொடங்கவில்லை என்பதால் குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.