வால்பாறையில் வெளுத்து வாங்கும் மழை.. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வால்பாறையில் பலத்த மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
வால்பாறை: வால்பாறையில் கடந்த சில நாட்களாக பெய்து கன மழை காரணமாக நடுநிலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 28 அடி உயர்ந்துள்ளது. கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அணைக்கு செல்லும் பன்னிமேடு சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்மழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதால் குற்றாலும் செல்லும் பாதைகளில் பல மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனினும், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்டங்களின் அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.