தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை- சென்னையில் லேசான சாரல்
தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டிய நிலையில் சென்னையில் இரவு சாரல் மழை பெய்தது. காலை நேரத்தில் வெயிலும் சாரலுமாய் மக்களை உற்சாகப்படுத்தியது.
சென்னை: சென்னை, கடலூரை மிரட்டிய நாடா புயல் வலுவிழந்து வெள்ளிக்கிழமை அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் வியாழக்கிழமை மழை பெய்த நிலையில் வெள்ளிக்கிழமை வெயில் தலை காட்டியது. ஆனால் குளிர்ந்த காற்று வீசியது. மாலையில் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மயிலாப்பூர், வடபழனி, பட்டினப்பாக்கம், ராமாபுரம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் சாரல் மழை பெய்தது.
பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் மழையின் வேகம் திடீரென்று குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்தது. மாலை 4 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை இரவு 7 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
புறநகரில் மழை
சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மாற்று அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கடுத்து ஓடியது.
நனைந்த மக்கள்
காலையில் வெயில் கொளுத்தியதால், மழை வராது என்ற நம்பிக்கையில் குடை, மழை கோட் இல்லாமல் அலுவலகங்கள் சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பலர் நனைந்தபடி இருசக்கர வாகனங்களில் பயனித்தனர்.
மதுரையில் மழை
மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், விழுப்புரம், சிவகங்கை, திருச்சி, வேலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கோவை, கிருஷ்ணகிரி, தேனி, தருமபுரி, நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
விருதுநகரில் மழை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான தாயில்பட்டி, பெறப்பட்டு, சித்தூராஜபுரம், நாரணாபுரம் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் மூன்று மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மீண்டும் புதிய புயல்
இதனிடையே நடா புயல் கரையை கடந்தாலும் அடுத்து வரும் புயல் தமிழகத்தை மிரட்டுகிறது. தெற்கு அந்தமான் கடற்பரப்பில் உருவாகியுள்ள காற்றுழத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கொஞ்சம் வெயில்... லேசாய் சாரல்
சென்னையில் நேற்று காலை பொழுது வெயிலுடன் விடிந்தது. மழை பெய்வதற்கான அறிகுறியே தென்படவில்லை. மாலையில் மழை பெய்தது. அதேபோல இன்றும் வெயில் தலை காட்டியது... திடீரென சாரல் மழை பெய்து ஜில்லென்று நனைத்தது. மாலையில் மழை வருமோ என்று எதிர்பார்ப்புடன் பலரும் குடையுடன் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றனர். ஆனால் மழை பெய்யாமல் இதமான சூழ்நிலையே நிலவியது.