தொடர் மழை... சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
தொடர் மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஏரிகளின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொடர் மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 2015-இல் சென்னையே வெள்ளத்தில் மூழ்கி குட்டித் தீவாக காட்சியளித்தது. அப்போது சாலைகளிலெல்லாம் மார்பளவு தண்ணீர் இருந்தது. நீர்நிலைகள் கரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்தது.
ஆனால் அந்த நீரை நாம் சேமித்து வைக்க தவறிவிட்டோம். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்துக்கு ஏமாற்றத்தையே அளித்தது. இதனால் விவசாய பயிர்கள் கருகின.
தண்ணீர் பஞ்சம்
இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவியது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டுவிட்டன. போதிய மழையில்லாததால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கியது.
கனமழை
தற்போது தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதாலும், கர்நாடகத்திலும் மழை பெய்து வருவதாலும் பெரும்பாலான நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
நீர் மட்டம்
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கும் அளவுக்கு கொள்ளளவு உடையது. இன்று காலை நிலவரப்படி ஏரியில் 150 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 90 கனஅடி தண்ணீர் வருகிறது. 32 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நீர் திறப்பு
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 21 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
புழல், சோழவரம் மற்றும் பூண்டி
புழல் ஏரியில் 57 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 40 கனஅடி தண்ணீர் வருகிறது. 5 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முழுவதும் வறண்டு கிடந்த சோழவரம் ஏரியில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளது. ஏரியில் 19 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. (மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கனஅடி) 23 கனஅடி தண்ணீர் வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி ஆகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 23 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.