வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதால் சென்னை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் காற்றுடன் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
இலங்கை அருகே நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்தமிழகத்திலும், வடகடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடனும் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கிண்டி, வேளச்சேரி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்வதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை நகர்பகுதிகளில் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, சோளவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்த நிலையில், அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம், பல்லாவரம், சேலையூர், குரோம்பேட்டை, மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளிலும் பேய் மழை பெய்து வருகிறது.
கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் - நாகை இடையே 24 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.