வட தமிழகத்தில் மழை குறையும்: தென் கடலோர மாவட்டங்களில் கன மழை- வானிலை மையம்
சென்னை: வட தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர்த்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் முதல் தொடங்கும். இந்த ஆண்டு தாமதமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை அக்டோபர் 28ல் உருவாகி, மழை பெய்ய தொடங்கியபோதுதான், பருவமழை தொடக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பருவமழைக்காலம் தொடங்கி இன்று வரையில் தமிழகம் முழுவதும் சராசரியாக 64 செ.மீ மழை பெய்துள்ளது. ஆனால், இயல்பாக இக்காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை 39 செ.மீ மட்டுமே. தொடர்ந்து தற்போதும் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் 130 சதவிகிதம் மழை கூடுதலாக பெய்துள்ளது.
சமீபத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலையானது, காலை நிலவரப்படி குமரி அருகே நிலைகொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 22 செ.மீ மழை பெய்துள்ளது. தஞ்சை மதுக்கூரில் 9 செ.மீ மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் கடலோர டெல்டா மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.
கனமழையை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர இதர கடலோர மாவட்டங்களில், தெற்கு உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யலாம்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை பெய்யும் என்று கூறிய பாலச்சந்திரன், வட தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்று கூறியுள்ளார்.மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கடலூர், நாகை, தஞ்சை, வேதாரண்யம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரையின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திங்கட்கிழமையும், செவ்வாய்கிழமையும் மழை இல்லை. இதனால், நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. நேற்று நள்ளிரவு முதல் சென்னை, தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையும், கனமழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.