ஆர்ப்பரிக்கும் மழை.. நிரம்பி வழியும் அணைகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. கன்னியாகுமரியும் தவிக்கிறது
100-க்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கிவிட்டன.
Recommended Video
கன்னியாகுமரி: கொட்டி வரும் கன மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பெரிய அளவில் மழை நீடித்து வருகிறது இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக கனமான மழை கொட்டி வருகிறது.
கிராமங்கள் மூழ்கின
இதன் காரணமாக இங்குள்ள ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணைகளுக்கும் நீர் வரத்து உயர்ந்து வருகிறது. கோதையாறு, பரளியாறு, தாமிபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.
ஆயிரக்கணக்கானோர் மீட்பு
ஆயிரக்கணக்கான வீடுகள் இந்த வெள்ள நீரில் மூழ்கின. ஆனால் கிராம மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
உபரி நீர் திறப்பு
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 2 அணை 16 அடி தாண்டியதால் அணையில் இருந்து வினாடிக்கு 3200 கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
6-வது நாளாக குளிக்க தடை
இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து 6-வது நாளாக குளிக்க தடை விதித்துள்ளது. திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம். இதனால் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர். மேலும் தண்ணீரானது பல்வேறு பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
அண்ணன்-தம்பி மாயம்
தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் ஆற்று நீர் புகுந்தது. இதன் காரணமாக தங்கள் படகுகளை பாதுகாப்பாக கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள ஈடுபட்டனர். அதில், இனம்புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான சுஜின், சுனில் ஆகியோரை ஆற்றுநீர் இழுத்து சென்றது. மாயமான மீனவர்களே தேடும் பணிகள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.