நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை.. ஒரே நாளில் 20 செ.மீ கொட்டித்தீர்த்தது!
நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
உதகை: நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தோவாலாவில் 20.4 சென்டி மீட்டர் மழையும் கூடலூரில் 19.2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதேநேரத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தேவாலாவில் 20.4, கூடலூரில் 19.2 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நீலகிரி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.