தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யுமாம்.. வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம், புதுச்சேரியின் பல இடங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சில மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று இரண்டு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. முடீஸ், சின்னக் கல்லாறு சின்கோனா பெய்த பலத்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்கும் மழை நீர் புகுந்துள்ளதுடன், சாலைகளிலும் நீர் தேங்கியுள்ளது.
அதேபோல, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிகளான குத்தாலம் மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் நல்ல மழை பெய்துள்ளது.
இந்நிலையில், குமரிக்கடல், கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், அதனால் வரும் 30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கோ, பலத்த மழைக்கோ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.