மழை ஓய்ந்தும் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவம், கடற்படை
சென்னை: சென்னை மாநகரில் மழை விட்டும் வெள்ளம் வடியவில்லை. உயிரை காக்க கண்ணீரும் சோகமுமாய் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர் பல ஆயிரக்கணக்கான மக்கள். சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு பெருக்கெடுத்துள்ள வெள்ளநீரில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் களம் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான 15 ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
சென்னை கோட்டூர்புரத்தில் மீட்பு சவலாக உள்ளது என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வீடாக சென்று மக்களை காப்பாற்றி வருகின்றனர். மேலும் முதற்கட்டமாக வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் திங்கட் கிழமை இரவு முதல் தொடங்கிய கனமழை சுமார்40 மணி நேரத்திற்கும் இடை விடாது மழை கொட்டியது. கனமழை காரணமாக சென்னை நகரமே தீவு போல மற்ற இடங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் இல்லாமலும், உணவு பொருட்கள் இல்லாமலும் பொதுமக்கள் அதிக அவதியடைந்து வருகின்றனர்.
மூழ்கிய வீடுகள்
வரலாறு காணாத அளவிற்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஈக்காட்டுதாங்கல் பாலம், கோட்டூர்புரம் பாலம், சைதாப்பேட்டை மறைமலைஅடிகள் பாலம், அடையாறு திருவிக பாலம் போன்றவற்றில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலையை விட உயரமாக கட்டப்பட்டுள்ள பாலத்தை தொடும் அளவிற்கு வெள்ளநீர் செல்வதால் ஆற்றங்கரைகளில் உள்ள வீடுகள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளன.
சாதனை முறியடிப்பு
சென்னையில் டிசம்பர் மாதம் முழுவதிலும் சராசரியாக 191 மிமீ மழை பெய்துவதுதான் இதுவரை புள்ளிவிவரத்தில் உள்ள மழைப்பதிவாகும். ஆனால், நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான மழைப்பதிவு காலத்தில், 345 மிமீ மழை பதிவாகி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இதுவரையில், டிசம்பர் முதல் நாளில் இவ்வளவு மழை பதிவானதும் இதுவே முதல் முறை.
தீவான சென்னை மாநகரம்
சென்னை பிராதான சாலையான அண்ணா சாலையிலேயே ஆங்காங்கே குளம் போல் நீர்தேங்கி போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பிரதான சாலைகள் அனைத்திலும் மழைநீர் வடிய இடமின்றி பெருக்கெடுத்து ஓடுகிறது. திரும்பும் திசை எல்லாம் மழைநீர் சூழ்ந்து, சென்னை தனித்தீவாக வெள்ளத்தில் மிதக்கிறது.
வெள்ளம் சூழ்ந்த நகரம்
எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், வேப்பேரி, கோயம்பேடு, சேத்துப்பட்டு, வியாசர்பாடி, கிண்டி, சிந்தாதிரிப்பேட்டை, கோட்டூர் புரம் உள்பட பல்வேறு இடங்களிலும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மக்களின் கூக்குரல்
தீயணைப்பு, போலீஸ் கட்டுப்பாடு, அவசர உதவி எண்களுக்கு பலர் தொடர்பு கொண்டபடி இருப்பதால் அந்த எண்களுக்கு எப்போது தொடர்பு கொண்டாலும் பிசியாகவே உள்ளன. தனியார் நிறுவனங்களில் மாட்டி கொண்ட ஊழியர்கள் உணவு கிடைக்காமலும், வீடுகளுக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருப்பதால் அவர்களை மீட்க யாராலும் முடியவில்லை. இதனால் அவர்கள் அலுவலகங்களிலேயே முடங்கியுள்ளனர்.
மீட்புப்பணி தீவிரம்
சென்னை கோட்டூர்புரத்தில் மீட்பு சவலாக உள்ளது என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வீடாக சென்று மக்களை காப்பாற்றி வருகின்றனர். மேலும் முதற்கட்டமாக வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப்படுகிறது.
சவாலை சந்திக்கும் மீட்புக்குழு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புக் குழுவினருக்கு இது மிகவும் சவாலான நேரம் என்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் பொது மேலாளர் ஓ.பி. சிங், கூறியுள்ளார்.
களத்தில் மீட்புக்குழு
22 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் சுமார் 80 படகுகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 3 மீட்புக் குழுக்களை டெல்லியில் இருந்தும், 4 மீட்புக் குழுக்களையும் புவனேஸ்வரில் இருந்தும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பல மாநில மீட்புக்குழுவினர்
பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. குறுந்தகவல்கள் மூலமும் தொடர்பு கொள்கிறார்கள். நிலைமை இதனைவிட மோசமடையும் பட்சத்தில் மேலும் சில மீட்புக் குழுக்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார் ஓ.பி சிங்.
வடியாத துயரம்
சென்னையில் பல ஆயிரக்காணவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் ஹோட்டல்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஹோட்டல்களில் அறைகள் நிரம்பியுள்ளதால் அங்கும் இடமின்றி நடுவழியில் தவித்து வருகின்றனர் ஆயிரக்கணக்கான மக்கள். சொந்த ஊருக்கு போகவும் வழியில்லை என்பதுதான் சோகம்.