விடிய விடிய கொட்டிய கனமழை... மின்சாரம் துண்டிப்பு - இருளில் மூழ்கிய சென்னை
சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றெழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு 9 மணி முதல் பல நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சென்னை மாநகரமே இருளில் மூழ்கியது.
கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை மாநகராட்சிமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னைக்கு அருகே வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கடற்கரையை ஒட்டி ஆந்திரக் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக அதிகமான கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
விடிய விடிய மழை
சென்னையில் நேற்று காலை முதல் கொட்டிய மழை மாலையில் சில மணி நேரம் ஓய்ந்தது. மீண்டும் 8 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய விடாமல் கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
கரைபுரண்ட வெள்ளம்
அடையாறு,திருவான்மியூர், பாரிமுனை, ஈக்காட்டுத்தாங்கல், நீலாங்கரை, வேளச்சேரி, திருவெல்லிக்கேணி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பழம், மயிலாப்பூர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் இரவு நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேங்கிய வெள்ளம்
சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மீட்புக்குழு தயார்
தொடர் மழை காரணமாக சென்னை மாநகராட்சிமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 7 பேர் கொண்ட துணை ஆணையர்கள் தலைமையிலான குழு மீட்புபணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பேரிடர் மீட்புக்குழுினரும் மாநகராட்சிக்கு துணையாக மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.
சுரங்கப்பாதைகளில் வெள்ளம்
சென்னையில் சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற பம்புசெட்டுகள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். தவிர 45 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் படகுகள் மூலம் தயார் நிலையில் உள்ளனர்.
பல மணி நேர மின்வெட்டு
காற்றுடன் பெய்யும் மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்னமும் மின்சாரம் வந்த பாடில்லை. விடிய விடிய சென்னை மாநகரம் இருளில் மூழ்கியது.
குளிர்ந்த சென்னை
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே 100 பாரன்ஹீட் வெப்பம் நிலவி வந்தது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது 79 டிகிரி பாரன்ஹீட் ஆக வெப்பம் தணிந்து குளுமையான சீதோஷ்ணநிலை நிலவுகிறது.