சென்னை பெருநகரம் பல தீவுகளாக துண்டிப்பு! ஆள் அரவமற்று சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின!!
சென்னை: வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை நகரின் இயல்பு வாழ்க்கை பெருமளவு முடங்கிப் போய்விட்டது. சென்னையின் பிரதான சாலைகள் முழு அடைப்பு நடத்தப்படும் காலத்தைவிட மிக மோசமாக வெறிச்சோடி கிடக்கின்றன. ஒட்டுமொத்த சென்னை பெருநகரமே தனித் தனி தீவுகளாக துண்டிக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் கடந்த 40 மணிநேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த பேய்மழையால் ஊரெங்கும் வெள்ளம்.. சென்னை புறநகர்களில் 2 மாடி கட்டிட்டங்களும் மூழ்கிவிட்டன.. முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
|
அச்சுறுத்தும் அடையாறு
சென்னை நகருக்குள் பிரதானமாக ஓடும் அடையாறு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது... அடையாற்றின் குறுக்கே உள்ள காசி தியேட்டர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு பாலங்களை மூழ்கடித்துக் கொண்டு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
|
உடைந்துவிடுமோ சைதை பாலம்?
இவற்றில் எந்த பாலம் எப்போது உடையுமோ என பெரும் பீதியில் இருக்கிறார்கள் சென்னை வாசிகள். அதுவும் மெட்ரோ ரயிலால் ரொம்பவே பதம் பார்க்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் என்னவாகுமோ? உடையுமோ? என நினைத்துப் பார்க்க முடியாத பேரவலத்துக்கு மிக அருகில் இருக்கிறது.
வீட்டுக்குள் முடக்கம்
சென்னையின் பிற பகுதிகளை இணைக்கக் கூடிய இந்த பிரதான பாலங்களில் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு இயல்பு வாழ்க்கை வெள்ளத்தால் அடியோடு முடக்கப்பட்டுவிட்டது.
எங்கெங்கும் தீவுகள்
ஏற்கனவே கிழக்கும் தாம்பரம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம் பகுதிகள் ஒரு தீவாகிவிட்டன... முடிச்சூர், கிருஷ்ணாநகர் மேற்கு தாம்பரம் ஒரு தீவாகிவிட்டது.. வேளச்சேரி தனி ஒரு தீவாக இருக்கிறது..
இப்போது அடையாறு, திருவான்மியூர் ஆகியவை பிரதான சென்னையில் இருந்து துண்டிக்கப்பட்டு தீவாகிவிட்டது. இப்படி சென்னை நகரின் பல பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு துண்டிக்கப்பட்டு தீவாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து போக்குவரத்தும் அவுட்
சென்னைக்குள் எந்த ஒரு வாகனமும் நுழையமுடியாது..வெளியேற முடியாது.. வெளியூர் ரயில்களும் புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.. விமான சேவைகளும் நிறுத்தப்ப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டுவிட்டது.
|
வெறிச் சாலைகள்
பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. இதனால் சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி பெரும் வெள்ள சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.