சென்னை மற்றும் புறநகரங்களில் காற்றுடன் கனமழை: இரவு முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு !
சென்னை: சென்னை, கிண்டி, நுங்கம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்வதாலும் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியாக இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெப்பச்சலனம் கடற்பகுதியில் உருவான மேகக்கூட்டம் தரைப்பகுதி நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது மழை பெய்து வருகிறது.
கிண்டி, நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர், பெருங்களத்தூர், மாடம்பாக்கம் பகுதிகளில் சூறைகாற்றுடன் அரை மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. ஆவடி, அம்பத்தூர், பாடி, முகப்பேர், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களிலும் மழைபெய்து வருகிறது.