4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி
Recommended Video
சென்னை: சென்னையில் நான்கு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. குடிநீர் தட்டுப்பாட்டால், மழைக்காக காத்திருந்த மக்கள், மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை,கோடம்பாக்கம, கிண்டி, எழும்பூர், திருவல்லிக்கேணி , பட்டினப்பாக்கம் , சைதாப்பேட்டை, மைலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் கனமழை தொடர்கிறது.
மக்கள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டத்தின் எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மகுடஞ்சாவடி, செட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. தொடர் மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர் மழை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வண்டிச்சோலை, வெலிங்டன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்தால் காய்கறிகள், தேயிலை போன்றவை நல்ல மகசூல் தரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர் .
மகிழ்ச்சி தந்த மழை
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தொடர்ந்து சில நாளாக மழை பெய்கிறது. பாபநாசம், திருவிடைமருதூர், தாராசுரம், அம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
வெப்பம் தணிந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம், ஆரணி, மீஞ்சூர் செங்குன்றம் , புழல் உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து அங்கு குளிர்ச்சிகரமான சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.