கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை... நிரம்பும் அணைகள் - தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பத்தொடங்கியுள்ளன. காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை மளமளவென உயர்ந்து வருகிறது.
மேட்டூர்: கர்நாடகவின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரத்தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் - கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கனமழைக்கு வாய்ப்பு
கர்நாடகாவில் இன்று முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 4 நாட்கள் பரவலாக மழை பெய்யும் என்று கர்நாடக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனரான சி.எஸ்.பட்டீல், இன்று முதல் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றார்.
கடலோர மாவட்டங்கள்
கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். கர்நாடகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
வெப்பநிலை பதிவு
கடந்த 2 நாட்களில் மட்டும் உத்தர கன்னடா மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், சிவமொக்கா மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. பெங்களூருவை பொறுத்தவரை பரவலாக மழை பெய்யக்கூடும். பெங்களூருவில் அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பமும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகள்
கர்நாடகவின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 28,608 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 13,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 27,220 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால், அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
உயரும் நீர்மட்டம்
கே.ஆர்.எஸ்.மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 38,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து ஏற்கனவே 36,000 கன அடி திறந்து விடப்பட்ட நீரானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு 28,000 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 34,141 கன அடியாக உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 80 அடியாக உயர்ந்துள்ளது.