கேரளாவில் தெ.மே பருவமழை தீவிரமடைகிறது... வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கூடலூர்: கேரளாவில் கனமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை பொய்த்ததால், நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் அபாயம் ஏற்பட்டது.
கேரளாவில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக பெய்தது. அதிலும் சில நாட்கள் மட்டும் பெய்துவிட்டு அதன் பிறகு ஏமாற்றிச் சென்றது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் குறைவான மழைப் பொழிவே கிடைத்தது.பெரியாறு அணையின் நீர் மட்டம் குறைந்து வந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் பெரியாறு அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 57 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 336 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 112 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 112.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1247 மில்லியன் கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 27.72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 52 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 40 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 287 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.50 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 68.88 அடியாகவும். வரத்து 15 கன அடியாகவும் மற்றும் திறப்பு 3 கன அடியாக உள்ளது.
இன்று காலையும், கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.