மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் 27ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக நேற்று சின்னகல்லாரில் 70 மிமீ, தேவாலா 60 மிமீ, வால்பாறை 40 மிமீ, தாமரைப்பாக்கம், பொன்னேரி, பெரும்புதூர், பெரியாறு, செங்கல்பட்டு, நடுவட்டம், மாமல்லபுரம், காஞ்சிபுரம், அரக்கோணம் 10 மி.மீ மழை பெய்துள்ளது.
சென்னை மற்றும் சென்னையில் புற நகரில் நேற்று மாலையில் சில இடங்களில் திடீர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளிலும், புறநகரில் சில பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி
இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி மேலும் அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழகத்தை ஒட்டிய கேரள பகுதி மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த நிலை 27ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.