நெல்லையில் துள்ளல் மழை... கிடுகிடுவென உயரும் அணைகளின் நீர் மட்டம்!
திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இதனிடையே திங்கள்கிழமை பிற்பகலில் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் இடியுடன் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கியது முதலே திருநெல்வேலி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவியது. கோடை வெயிலை தணிக்க அவ்வப்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
இடி மின்னலுடன் மழை
இம்மாவட்டத்தில் திங்கள்கிழமை பகலில் கடும் வெப்பம் நிலவியது. பிற்பகலில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இடியுடன் மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அணைகளில் நீர்மட்டம்
தொடர் மழையால் கடனாநதி அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து திங்கள்கிழமை காலை நிலவரப்படி 39.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர்வரத்து இருந்தது.பாபநாசம் அணையின் நீர்மட்டம் 74.35 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 86.65 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.31 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 28.54 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.08 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 10.75 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.99 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 117 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 6 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கோடைகாலம் தொடங்கிய முதலே அணைகளில் நீர்மட்டம் குறைந்த வந்த நிலையில் தற்போது மழை பெய்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.