காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: தமிழகம், புதுச்சேரியில் இன்னும் 3 நாட்கள் மழை- ரமணன்
சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், பல பகுதிகளில் வெள்ளம் வடியாமல் உள்ளது. வெயில் லேசாக தலைகாட்டி மக்களுக்கு ஆறுதல் அளித்தாலும் அடுத்த அரைமணி நேரத்தில் மழை கொட்டிவிட்டு செல்கிறது.
இதனிடையே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது கன்னியாகுமரிக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், "தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது கன்னியாகுமரிக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களிலும், தெற்கு உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மிதமானது முதல் கன மழை பெய்யும். வட கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தென் கடலோர மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.