தீபாவளி.. மதுரை மாநகருக்குள் அலைமோதிய மக்கள் கூட்டம்
மதுரை: தீபாவளி பொருட்கள் வாங்க மதுரை, தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி, காமராஜர் சாலை, விளக்குத் தூண் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி என்றாலே கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பகுதி மக்களும் புதுத்துணி வாங்க குடும்பத்தோடு ஜவுளி கடைகளை தேடி செல்வர். பெரிய கடை முதல் சிறிய கடை வரை கூட்டம் நிரம்பி வழியும். ஒரு மாதகாலமாக மாலை நேரங்களில் மட்டும் கூட்ட நெரிசல் காணப்பட்ட மதுரை மாநகரில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் களைகட்ட தொடங்கியது. பெரும்பாலான சிறிய பெரிய ஜவுளி கடைகள் அனைத்தும் கூட்ட நெரிசலோடு காணப்பட்டது.
விடிந்தால் தீபாவளி என்பதால் புதுத்துணி எடுப்பதற்காக மாசி வீதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தீபாவளிக்காக மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியும், விளக்குத்தூண், காமராஜர் சாலை போன்ற பகுதிகளிலும் புதிதாக ஏராளமான பிளாட்பார கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளில் துணிகள் மட்டுமின்றி கம்மல், செயின், மோதிரம், பாய், போர்வை, குடை, செப்பல் என அன்றாட தேவைகளுக்கான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளை விட பிளாட்பாரங்களிலேயே அதிக மக்கள் கூடினர்.
பிளாட்பார கடைகளில் மிக குறைவான விலைகளிலேயே பொருட்கள் கிடைத்ததால் பொதுமக்கள் அங்கேயே நிறைய பொருட்களை வாங்கி சென்றனர். என்னதான் பெரிய கடைகள் கோபுரம் போல் காட்சியளித்தாலும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் சாலையோர கடைகளிலே அனைத்து வித துணி வகைகளும் கிடைத்தால் ஏராளமானோர் அங்கும் குவிந்தனர்.
மதுரை மாநகரில் தீபாவளி பொருட்கள் வாங்க கடைசி நேரத்தில் மக்கள் குவிந்ததால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.