பொங்கல் விடுமுறை : வண்டலூர் பூங்காவில் குவியும் பார்வையாளர்கள் - சிறப்பு ஏற்பாடுகள்
பொங்கல் விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை : வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறையையொட்டி பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னையை அடுத்த வண்ட லூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தெற்கு ஆசியா விலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில்,1,500-க்கும் அதிகமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாலூட்டி வகைகளில் 38 இனங்களும், பறவைகளில் 20 இனங்களும், ஊர்வனங்களில் 14 இனங்களும் வளர்க்கப்படுகின்றன.
சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு தலம் இந்த பூங்கா. விடுமுறை தினங்களில் இங்கு பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.
வண்டலூர் பூங்காவில்
பொங்கல் திருவிழாவையொட்டி இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூட்டம் அலைமோதுகிறது. காணும் பொங்கல் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் இன்று அதிக அளவில் பூங்காவில் குவிந்து உள்ளார்கள்.
வர்தாவில் பாதிப்பு
வார்தா புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த பல ஆயிரம் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பசுமை நிறைந்து காணப்பட்ட பூங்கா, இன்று வறண்ட பூமியாக மாறியது. இதனால் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. வர்தாவில் பாதிக்கப்பட்ட வண்டலூர் பூங்கா சீரமைக்கப்பட்டு இந்த ஆண்டு திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூங்கா திறப்பு
காணும் பொங்கலையொட்டி வழக்கமாக செவ்வாய்கிழமை பூங்காவிற்கு அளிக்கப்படும் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பூங்கா செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாளை மட்டும் காலை 8 மணிக்கே பூங்கா திறக்கப்படும்.
வண்டலூர் பூங்கா
கூட்ட நெரிசலை சமாளிக்க 30 டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. நெரிசலில் சிக்காமல் இருக்க நுழைவுச் சீட்டுகள் மற்றும் பூங்காவின் இதர வசதிகளை ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்திருக்கிறது.