பதவியேற்றார் ஜெயலலிதா... சென்னையில் குவிந்த அதிமுக தொண்டர்களால் கோலாகலம்!
சென்னை: தமிழக முதல்வராக இன்று 6வது முறையாக பதவியேற்றார் ஜெயலலிதா. இதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதவியேற்பு விழாவைக் காண சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிமுகவினர் குவிந்திருந்தனர்.
இன்று பிற்பகல் 12 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகளை அரசும், காவல்துறையும் செய்திருந்தன. பாதுகாப்புக்காக மட்டும் 3000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பதவி ஏற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பிரமாண்ட ஏற்பாடுகள்
பதவி ஏற்பு விழா நடந்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஏற்பாடுகளை டி.ஜி.பி.அசோக்குமார், சென்னை நகர போலீஸ் கமிஷனர் அசுதோஷ் சுக்லா உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். நேற்று மாலை அங்கு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பதவி ஏற்பு விழாவையொட்டி 3 ஆயிரம் போலீசார் நேற்று இரவில் இருந்தே பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். 4 கூடுதல் கமிஷனர்கள், 6 இணை கமிஷனர்கள் மற்றும் 18 துணை கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதிமுகவினர் குவிந்தனர்
விழா நடக்கும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சுமார் 3 ஆயிரத்து 200 பேர் அமருவதற்கான இருக்கை வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழாவை காண்பதற்காக சென்னை நகர் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள், விழா நடைபெறும் பகுதிக்கு வருகை தந்திருந்தனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்து விட்டனர்.
மெரீனாவில் தொண்டர்கள்
தொண்டர்கள் வரும் வாகனங்களை மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் விழா நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொண்டர்கள் கடற்கரை காமராஜர் சாலையில் நெரிசல் இல்லாமல் நிற்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பதவிப்பிரமாணம்
இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், ஜெயலலிதாவுக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதா தனது அமைச்சரவையில், 28 அமைச்சர்களை நியமித்து உள்ளார். அவர்களும் இன்று பதவி ஏற்றார்கள். புதிய அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தேர்தல் படி பார்த்தால் ஜெயலலிதா 4வது முறையாக முதல்வரகியுள்ளார். அதேசமயம், இடையில் இரண்டு முறை முறைகேடு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கி்ல் சிக்கியதால் அவர் சிறை செல்ல நேரிட்டது. எனவே அந்தக் கணக்குப் படி பார்த்தால அவர் 6வது முறையாக பதவியேற்றுள்ளார்.
யார் யார்?
தமிழக அரசியல் தலைவர்களுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டது.
வெங்கையா - பொன் ராதாகிருஷ்ணன்
பிரதமர் நரேந்திர மோடி ஈரான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருவதால், அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அகன்ற திரையில்
முதல்வர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் 32 மாவட்டங்களிலும் எல்.இ.டி. அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல பதவியேற்பு விழா நடைபெறும் அரங்குக்கு வெளியேயும் பிரமாண்ட எல்இடி திரை வைக்கப்பட்டிருந்தது. அதில் மக்கள் பதவியேற்பு விழாவை நேரடியாக கண்டு களித்தனர்.
புதுப் பொலிவுடன் சாலை
பதவியேற்பு விழா நடைபெறும் மண்டபத்துக்கு வரும் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிளாட்பார பக்கவாட்டுச் சுவர்கள் வெள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தங்கள்
பதவி ஏற்பு விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் கார்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்-அமைச்சர் பதவி ஏற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் வாகன அனுமதி மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
பச்சை நிற பாஸ்
பச்சை நிற அனுமதி சீட்டு (பி-1) உள்ள வாகனங்கள் முக்கிய பிரமுகர்களை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டப நுழைவு வாயிலில் இறக்கி விட்டு, வாகனங்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நிறுத்தலாம். பச்சை நிற அனுமதி சீட்டு (பி-2 மற்றும் பி-3) உள்ள வாகனங்கள் முக்கிய பிரமுகர்களை வாலாஜா சாலை பல்கலைக்கழக முக்கிய நுழைவாயிலில் இறக்கிவிட்டு, வாகனங்களை எம்.ஆர்.டி.எஸ்., வார்டன் குடியிருப்பு மற்றும் விக்டோரியா விடுதி வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.
நீல நிற பாஸ்
நீல நிற அனுமதி சீட்டு வாகனங்கள் முக்கிய பிரமுகர்களை வாலாஜா சாலை மற்றும் கெனால் சாலை சந்திப்பில் இறக்கிவிட்டு, பி-1 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் டி.என்.சி.ஏ. நுழைவுவாயில் மைதானத்திலும், பி-2 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் பட்டாபிராம் வாசலிலும், பி-3 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மாநில விருந்தினர் மாளிகை வளாகத்திலும், பி-4 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் கலைவாணர் அரங்கிலும் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.
பழுப்பு நிற பாஸ்
பிரவுண் நிற அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் முக்கிய பிரமுகர்களை காமராஜர் சாலை மற்றும் ஆடம்ஸ் சாலை சந்திப்பில் இறக்கிவிட்டு, பி-1 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் தீவுத்திடலிலும், பி-2 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் தலைமை செயலக பொதுப்பணித்துறை மைதானம் எதிரிலும், பி-3 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் ராஜாஜி மன்ற மைதானத்திலும், பி-4 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் எம்.எம்.சி. மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.