மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கத்திற்கு மாறாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. தற்போது அது அதிகரித்து சுமார் 60 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.
பலத்த காற்று காரணமாக பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கான மீன் பிடி அனுமதியை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். இதனால் பாம்பன் பகுதியில் சுமார் விசைப்படகுகளை பயன்படுத்தி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இயலவில்லை.
மும்பையில் கனமழை: உத்தவ் தாக்கரே, நவாப் மாலிக் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
எச்சரிக்கை மற்றும் தடை காரணமாக கடலுக்கு செல்ல முடியாததால், பாம்பன் பகுதியில், சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளும், கடற்கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் 5,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் 10,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கிலான வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்றும் வீசிய பலத்த காற்றால் சிக்னல் கோளாறு காரணமாக பாம்பன் பாலம் அருகே ரயில்கள் நிறுத்தப்பட்டு வழக்கத்தைவிட மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.