ஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி!
சேலம், திருச்சி, தஞ்சாவூர், ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை: சேலம், திருச்சி, தஞ்சாவூர், ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன்காரணமாக பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
அதே நேரத்தில் அவ்வப்போது கோடை மழையும் வெளுத்து வருகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் பெருமளவு தப்பித்தனர்.
வானிலை மையம் தகவல்
இதனிடையே இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சியால் வரும் 24 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
கனமழை கொட்டி வருகிறது
இந்நிலையில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், அரியலூர், சேலம் , சிவகங்கை, ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
வாழை சேதம்
திருச்சி மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. வயலூர் பகுதியில் பலத்த காற்றுடன் கோடை மழை கொட்டியதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
பலத்த காற்று, இடியுடன்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடனும், இடியுடனும் கன மழை பெய்து வருகிறது.
திருவையாறில் மழை
தஞ்சாவூர்- அம்மாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. திருவையாறு உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்து கொட்டிவருகிறது. அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
சிவகங்கையில் பலத்த மழை
சேலம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்ந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, காளையார்கோவில், கொல்லங்குடி, சருகமணி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.