தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் சென்னை கோயம்பேட்டில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் கோயம்பேட்டிற்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வர வசதியாக, அன்றாட பேருந்துகள் உள்பட சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து, மொத்தம் 11,225 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளை பிடிக்க பலரும் முன்பதிவு செய்திருந்த நிலையில், அனைவரும் பேருந்துகளைப் பிடிக்க ஒரே நேரத்தில் சாலைகளில் குவிந்ததால் சாலையில் கடும போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழி உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து நிலையத்திற்கு ஒரு மணி நேரம் காலதாமதமாகவே சென்றுள்ளனர்.
இப்படி ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்தத்தான் கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம்- சானடோரியம், பூந்தமல்லி, அண்ணாநகர் மேற்கு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு, என 5 இடங்களிலிருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. என்றாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தன. இந்தப் போக்குவரத்து நெருக்கடி இன்றும் நாளையும் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, பயணிகளே பேருந்தை பிடிக்க சீக்கிரமாக புறப்படுங்கள்.