சாத்தூரில் சாலையை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாத்தூரில் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கின்றனர்.
விருதுநகர்: சாத்தூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றினாலும் அடுத்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிக்கின்றனர்.
சாத்தூரில் 4 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. கடந்த ஜூன் மாதம் நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை நிர்வாகமும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மீண்டும் சாலையை ஆக்கிரமித்தால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கைவிடுத்தனர். ஆனால் மெயின் ரோடு, முக்குராந்தகல் சாலையின் இருபுறங்களிலும் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதாக, இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து தகர செட் அமைத்தும், அனுமதி இல்லா இடங்களில் பால் பெட்டி வைத்தும், குடிசை அமைத்தும் வியாபாரம் செய்கின்றனர். இந்த சாலை வழியாகவே செல்லும் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
ஆக்கிரமிப்பால் வாகனங்கள் எளிதில் சென்று வரமுடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்தச் சாலையைக் கடந்துசெல்லவே பலமணிநேரம் ஆகிறது என்கிறார்கள் பொதுமக்கள்.
இதனால் சாத்தூரில் சாலையை ஆக்கிரமித்து கடை போடும் தள்ளுவண்டி வியாபாரிகளை கட்டுப்படுத்தவும் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றவும், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.