கனமழை, புயல் எச்சரிக்கை... கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
கடல் சீற்றத்துடன், கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலை முதலே கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் தமிழகம், புமுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மணிக்கு 45-55கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரை திரும்ப அறிவுறுத்தல்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பவர்கள் உடனடியாக கரை திரும்பவும் ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை மீனவ கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் சீற்றம்
ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரித்தது போலவே கடல் சீற்றத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
கடலூருக்கு மீட்புக்குழு விரைவு
கனமழை எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு கடலூர் விரைந்துள்ளனர். டிசம்பர் 4 முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், டிசம்பர் 6,7ஆம் தேதிகளில் கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.