நெல்லையில் ஆர்ப்பரிக்கும் காற்று... காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் காற்றின் வேகம் குறையாமல் வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி: தென் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மின் உற்பத்தியும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசி வருகிறது.
தமிழகத்தில் உள்ள சுமார் 11 ஆயிரம் காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 7 ஆயிரம் மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யலாம். காற்று வேகம் அதிகரிப்பால் கடந்த ஒரு வார காலமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், தினமும் 2 ஆயிரம் மெகா வாட்டுக்கு குறையாமல் மின் உற்பத்தி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த வாரம் 3 ஆயிரம் மெகா வாட்டை கடந்த காற்றாலை மின் உற்பத்தி இந்த வாரம் 4 ஆயிரம் மெகா வாட்டை கடந்துள்ளது. 22ம் தேதி அதிகப்பட்சமாக 3,383 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
23ம் தேதி அதிகாலை 3,100 மெகா வாட் மின் உற்பத்தி கிடைத்தது. இந்நிலையில், இன்று அதிகாலை காற்றின் வேகம் மேலும் அதிகரித்ததால் காற்றாலை மின் உற்பத்தி 4,300 மெகா வாட்டாக உயர்ந்தது. இதனால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.