அமைச்சர்கள் கும்பிடு போட பறந்து செல்வாரே ஜெயலலிதா.. அந்த ஹெலிகாப்டரை விற்க முடிவாம்
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரை விற்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் பயணத்துக்காக 2006ம் ஆண்டு நவீன ஹெலிகாப்டர் ஒன்று வாங்கப்பட்டது. "பெல் 412 இ.பி." என்ற வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் 2 என்ஜின்கள் கொண்டது. 11 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டங்களில் பல முறை இவற்றில்தான் பயணித்துள்ளார். ஹெலிகாப்டர் மேலே பறந்த பிறகும் அதை பார்த்து அமைச்சர்கள் கும்பிடு போட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கேலி சித்திரங்களாக சுற்றியதே நினைவிருக்கிறதா? அது இந்த ஹெலிகாப்டர்தான்.
[இதற்கு முன்பு எந்த தமிழக ஆளுநராவது இப்படி செய்து பார்த்துள்ளீர்களா? ]
ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வரை அது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பிறகு பழுது அடைந்ததால் அதன் பயன்பாடு என்பது, நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது அந்த ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஹெலிகாப்டரை பழுது பார்த்து பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் விற்பனை செய்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த ஹெலிகாப்டரை விற்பதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.