ஹலோ தாத்தா, பாட்டிம்மா எப்படி இருக்கீங்க.. கோவை போலீஸின் சபாஷ் திட்டம்.. புது உறவு பாலம்!
முதியோர் பாதுகாப்புக்கு ஹலோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஹலோ தாத்தா, பாட்டிம்மா எப்படி இருக்கீங்க.. கோவை போலீஸின் சபாஷ் திட்டம்.. புது உறவு பாலம்!
Recommended Video
கோவை: கோடிக் கோடியாக பணம் கொட்டிக் கிடந்தாலும், கிலோ கணக்கில் நகைகள் பீரோவில் ஜொலித்து கொண்டிருந்தாலும், வயதான காலத்தில் அன்பாக பேசவும், அரவணைக்கவும், அவர்களை தழுவிக் கொள்ளவும் உடன் ஒரு ஆளில்லை என்பதுதான் இதயவலிகளின் ஒட்டுமொத்த உச்சம். நாள் முழுவதும், வருடம் முழுவதும், ஏன் காலம் முழுவதும் ஓடி ஓடி பொருள் தேடி பணம் சேர்ப்பதையே பெரும்பாலானோர் லட்சியமாகவும் கனவாகவும் கொண்டுள்ளபோது வயது முதிர்ந்தவர்களின் கரம் பற்றி அரவணைக்க நேரமேது?
இவர்களுக்காவது சொல்லிக் கொள்ள உறவு உண்டு. ஆனால் ஆதரவற்ற முதியோர்கள் இருக்கிறார்களே.. அவர்களின் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம். ஆதரவற்ற முதியோர் என்று பொதுவாகவும் எளிதாகவும் சொல்லிவிடுகிறோம். ஆனால் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால், அன்றைய சமூக அமைப்பில் பின்னிக்கிடந்த கூட்டுக்குடும்பத்திலிருந்து வந்தவர்களாகவே இவர்கள் பெரும்பாலும் இருப்பார்கள். அதனால் இவர்கள், சிறப்புடனும், வளமையுடனும், இளமையுடனும் ஏராளமான சொந்த பந்தங்களுடன் இரவு-பகல்களை கழித்தவர்கள். ஆனால், இன்று அத்தகைய முதியோர்களின் உடலின் கடைசி துடிப்பு அடங்கும்போதுகூட உடன் எவரும் இல்லாமல் மடிவது, வெகு இயல்பாக அரங்கேறி வருகிறது.
சில முதியோர் தங்கள் உறவுகளால் விரட்டியடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள், சில முதியோர் தங்கள் பிள்ளைகளை இழந்தவர்களாக இருப்பார்கள், சில முதியோர் வேலை காரணமாகவோ அல்லது சூழ்நிலை காரணமாக தனித்து விடப்பட்டவர்களாக இருப்பார்கள். எப்படி பார்த்தாலும் அந்த தனிமை மரணத்திலும் கொடியதுதான்.
ஹலோ திட்டம் அறிமுகம்
இதுபோல், தனியாக இருக்கும் வயதானவர்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் காவல் துறையினர் ஒரு புது திட்டத்தை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் ஹலோ திட்டம். சரி, இந்த திட்டம் ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா? ரோட்டில் நடந்து செல்லும் மூதாட்டிகள், மற்றும் வீட்டில் தனியாக வசிக்கும் முதியோர்களை குறிவைத்து மர்மநபர்கள் திருட்டு, வழிப்பறிகளை மனசாட்சியே இல்லாமல் நடத்தி வருகின்றனர். இதனை தடுக்க என்ன செய்யலாம் என காவல்துறையினர் திட்டமிட்டனர்.
ஒரு மகனாக.. பேரனாக..
அதன்படி கோவை மாநகரில் எவ்வளவு முதியோர்கள் தனியாக வசிக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டது. அப்போது பெரும்பாலும் மகன், மகள் அல்லது உறவினர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாவட்டங்களிலும் தங்கி பணியாற்றி வருவது தெரிந்தது. ஆனால் உறவென்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லாமல், நோயின் பிடியிலும், மன வேதனையிலும் தனித்து வாழ்பவர்கள் 700 பேர் என தெரியவந்ததையடுத்து கோவை மாநகர காவல்துறையே அதிர்ச்சி அடைந்தது. இதுபோன்ற முதியவரை பாதுகாக்க உருவானதே இந்த ஹலோ திட்டம். ஒரு மகனாக, ஒரு பேரனாக, போலீசார் முதியோர்களிடம் பேச வேண்டும் என்பதே இதன் அடிப்படை.
தினமும் சந்திக்க அறிவுறுத்தல்
இத்திட்டத்தின்படி போலீசார் தங்கள் பகுதிகளிலுள்ள முதியோரிடம் தினமும் ஒருமுறையாவது போனில் பேச வேண்டுமாம். இதுபோன்ற முதியோரை பாதுகாக்கும் வகையில், ஹலோ எனும் திட்டத்தை, மாநகர போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் மாநகரில் தனியாக வசித்து வரும் முதியோரை, குற்ற சம்பவங்களில் இருந்து முழுமையாக காக்க முடியும் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
போலீசாருக்கு அறிவுரை
இதன்மூலம் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலோ, மருத்துவ வசதிகள் தேவைப்பட்டாலோ உடனடியாக உதவிகள் செய்யப்படுமாம். தனியாக வசித்து வரும் முதியோரை, தங்களது பெற்றோர் போல் கருதி, கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, முதியோரும், தங்களுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் போலீசாரின் மொபைல்போன் எண்களுக்கு, தாராளமாக அழைக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு பெரிய சல்யூட்
எப்படி எப்படியோ வளர்ந்து, வாழ்ந்து, இன்று நாதியற்று தனிமை சிறையின் பிடியில் சிக்கி நாட்களை கழித்து வரும் முதியோர்களுக்கு உண்மையிலேயே இந்த திட்டம் உபயோகமானதுதான். இது எவ்வளவு பயனுள்ளது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கோவை மாநகர காவல்துறை உணர்வு பூர்வமாக யோசித்து ஒரு உன்னத திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைத்துள்ளதாகவும், எப்போது போனில் கூப்பிட்டாலும் அன்பாக போலீசார் இருப்பதாகவும் முதியோர்கள் தெரிவிக்கும்போது அவர்களின் கண்களில் கண்ணீருடன் மகிழ்ச்சியும் தெறித்து போவதை காண முடிகிறது. கோவை மாநகர காவல்துறைக்கு ஒரு பெரிய சல்யூட்!