ஹெல்மெட் சோதனை கெடுபிடியில் கடந்த வாரமும் திருச்சியில் பெண் பலி!
ஹெல்மெட் அணியாததால் போலீஸ் கெடுபிடிக்கு பயந்து வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞரால் திருச்சியில் கடந்த வாரம் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
Recommended Video
திருச்சி: திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் ஒருவர் போலீசார் கையில் சிக்காமல் இருக்க வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதில் பெண் ஒருவர் கடந்த வாரத்தில் உயிரிழந்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் விரட்டிச் சென்று வாகனத்தை உதைத்துத் தள்ளியதில் கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழக மக்கள் மத்தியில் காவல் ஆய்வாளரின் இந்த அத்துமீறிய செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரத்திலும் பெண் ஒருவர் டூவீலர் மோதி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மீது போலீசுக்கு பயந்து வேகமாக வந்த இளைஞரின் வாகனம் மோதி பெண் உயிரிழந்துள்ளார்.
திமுக பிரமுகரின் மனைவி சரஸ்வதி
திருச்சி எடத்தெரு பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் கடந்த பிப்ரவரி 25ம் தேதி காஜாபேட்டை ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இவர் இந்தப் பகுதி திமுக பிரமுகரின் மனைவி.
போலீசிடம் தப்பிக்க இளைஞர் முயற்சி
அப்போது அந்தப் பகுதியில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் போலீசார் பிடியில் சிக்காமல் தப்பிக்க வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
பெண் மீது வாகனம் மோதியது
அப்போது வாகனம் சரஸ்வதி மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சரஸ்வதி பிப்ரவரி 25ம் தேதி இரவு உயிரிழந்துள்ளார்.
சரஸ்வதி உயிரிழப்பு
ஹெல்மெட் கெடுபிடி காரணமாக பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தான் நேற்று திருச்சி திருவெறும்பூர் சாலையில் அதே ஹெல்மெட் கெடுபிடி காரணாக கர்ப்பிணிப் பெண்ணின் உயிர் அநியாயமாக பறிபோயுள்ளது.