பைக்கில் செல்லும் பெண்கள், சிறுவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமே: சென்னை ஹைகோர்ட் உறுதி
சென்னை: பைக்கில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்தாக வேண்டும், ஹெல்மெட் அணியாதவர்கள் வாகன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற உத்தரவில் மாற்றம் இல்லை என்று ஹைகோர்ட் தெரிவித்துவிட்டது.
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவை ஜூலை 1 முதல் கடுமையாக அமல்படுத்த ஹைகோர்ட் உத்தரவிட்டது. மேலும், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து வாகன ஆவணங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. ஹைகோர்ட் உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நிம்பு வசந்த் என்ற பெண், ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கட்டாய ஹெல்மெட் உத்தரவை கோர்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஹெல்மெட் பற்றாக்குறை இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், பெண்களுக்கு விலக்கு அளிக்கவும் தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.
நீதிபதி கிருபாகரன் முன்னிலையில், இம்மனு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: கட்டாய ஹெல்மெட் உத்தரவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை. தேவைப்பட்டால் எனது உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள்.
பைக்கை ஓட்டுவோர், பின்னால் அமர்ந்திருப்போர் ஆகியோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமே. பின்னால் அமர்ந்திருப்பது பெண் மற்றும் குழந்தைகளாக இருந்தாலும் அவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது. ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அனைவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.
ஹெல்மெட் பற்றாக்குறை உருவாக கோர்ட் காரணம் கிடையாது. ஏனெனில், ஹெல்மெட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை, இப்போது திடீரென போடப்பட்டது கிடையாது. அது முன்பிருந்தே அமலில்தான் உள்ளது. அந்த உத்தரவை இப்போது, சரியாக செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து வாகன ஆவணங்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடரும். அதை நிறுத்த முடியாது. இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்து வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.