கிராக்கி கூடுது.. ஹெல்மெட் விலை ஏறுது... கடுப்பில் மக்கள்!
சென்னை: ஜூலை 1ம் தேதி வெறும் தலையுடன் வண்டி ஓட்டக் கூடாது என்று உத்தரவு வந்தாலும் வந்தது மக்கள் எல்லாம் மண்டை காய்ந்து காணப்படுகிறார்கள். ஹெல்மெட் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஹெல்மெட்கள் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தலைவக் கவசம் நல்லதுதான், தலையைக் காக்க ஓரளவுக்கு உதவும் தான் என்றாலும் கூட மாதக் கடைசியான இந்த நேரத்தில் வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஹெல்மெட்கள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோர் பண முடையிலும் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோக குழந்தைகளுக்கும் வேறு வாங்க வேண்டியிருப்பதால் வீட்டில் குடங்களுக்குப் போட்டியாக ஹெல்மெட்கள் அணிவகுக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
கிராக்கியோ கிராக்கி
ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவை ஜூலை 1ம் தேதி முதல் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சமயத்தில் ஹெல்மெட்டுக்கு அவ்வவளாக கிராக்கி இல்லை. ஆனால் நாள் நெருங்க நெருங்க கிராக்கி அதிகரித்துள்ளது.
மெல்ல மெல்ல உயர்ந்த விலை
ஆரம்பத்தில் விலை சற்று நார்மலாகவே இருந்தது. ஆனால் தற்போது கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. கத்திரிக்காய் முருங்கைக்காய் வாங்குவது போல தட்டிப் பார்த்தும், உள்ளே தலையை விட்டு்ப் பார்த்தும் மக்கள் வாங்குகிறார்கள்.
ஐஎஸ்ஐ இருந்தால் மட்டுமே
ஐஎஸ்ஐ தரச் சான்றிதழ் இடம் பெற்ற ஹெல்மெட்டுகளை மட்டுமே வாங்குவது சாலச் சிறந்தது. அப்படி இல்லாதவை தரக் குறைவானவையாக இருக்கும். அதை அணிந்து செல்வதுதான் ஆபத்தானதாகும்.
விலை ஜாஸ்தி
தற்போது சராசரியாக 600 முதல் ரூ. 2000க்கும் மேல் வரை ஹெல்மெட்கள் விலை வைத்து விற்கப்படுகின்றன. மேலும் ஹெல்மெட்கள் ஸ்டாக் தீர ஆரம்பித்து விட்டதாகவும் திரியைக் கொளுத்திப் போடுகிறார்கள் வியாபாரிகள்.
நூற்றுக்கணக்கில் விற்பனை
சராசரியாக கொஞ்சம் ஹெல்மெட்கள் மட்டுமே இது நாள் வரை விற்று வந்தது. தற்போது ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் விற்க ஆரம்பித்துள்ளதால் விற்பனை மையங்களிலும் ஹெல்மெட் கிடைப்பது சிரமமாக உள்ளது.
விலை மேலும் கூடுமாம்
நாள் நெருங்க நெருங்க விலை மேலும் கூடும் என்றும் வியாபாரிகள் பீதியைக் கிளப்புகிறார்கள். மேலும் ஜூலை 1ம் தேதிக்குள் அனைவருக்கும் ஹெல்மெட் கிடைக்கும் என்று கூற முடியாது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.