அலையென மனித தலைகள்.. ஹெல்மெட் விற்பனை கடைகளில் கூட்டமோ படுஜோர்!
சென்னை: டூவீலர் ஓட்டுபவர்கள் ஜூலை 1ம் தேதி முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று சென்னை ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், ஹெல்மெட் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
ஹெல்மெட் அணியாவிட்டால் லைசென்சை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும். தரமான ஹெல்மெட் வாங்கிய பிறகே அதை திரும்பப் பெற முடியும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எனவே, இதுவரை ஹெல்மெட் வாங்காதவர்களும் இப்போது வாங்குகிறார்கள். ஹெல்மெட் விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஐ.ஸ்.ஐ. தரம் உள்ள ஹெல்மெட் அணிந்தால்தான் பாதுகாப்பு என்பதால் அந்த முத்திரையுள்ள ஹெல்மெட்கள் வாங்கி அணிய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், போலீசாரிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில், சாலை ஓரங்களில் விற்கப்படும் ஹெல்மெட்களையும் ஏராளமானோர் வாங்கி செல்கிறார்கள். ஜூலை 1ம் தேதி, நெருங்க நெருங்க கூட்டம் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்கள், பெண்கள் அணிவதற்கு தனித்தனி அமைப்புகளில் ஹெல்மெட் உள்ளன. குறைந்தபட்சம் ரூ.350 முதல் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 500 வரை ஹெல்மெட்கள் உள்ளன. ரூ.700 முதல் ரூ.1,800 வரையிலான தலைக் கவசங்களையே பெரும்பாலானோர் வாங்குகிறார்கள்.
தலையை மட்டும் மூடும் 'ஒப்பன்பேஸ்' தலைமுகம் ஆகியவற்றை மூடும் 'புல் பேஸ்' தேவைக்கு ஏற்றபடி சரி செய்து கொள்ளும் 'மாட்யூலர்' முன்பக்கத்தை மடக்கி விரிக்கும் 'பிலிம்' என்று பல வகையிலான ஹெல்மெட்கள் என அவற்றில் பல வகைகள் உள்ளன.
தலையை மட்டும் மறைக்கும் 'ஒப்பன்பேஸ்' வகை ஹெல்மெட்டில் மற்ற தலைக் கவசங்களை ஒப்பிடும்போது பாதுகாப்பு குறைவு. புல்பேஸ் ஹெல்மெட்கள் பாதுகாப்பானது மட்டுமல்ல. மண், தூசு பூச்சுகளில் இருந்தும் பாதுகாக்கும். எனவே இந்த வகை ஹெல்மெட்களே இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏற்றது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைக் கவசம் அணிந்தால் முடி கொட்டும், தலை வலி வரும் என்ற கருத்து உள்ளது. ஆனால் இதை மருந்துவர்கள் ஏற்கவில்லை. தலைக் கவசம் அணிந்தால் வியர்வை வரும். இதனால் சிலருக்கு சிறு கொப்பளங்கள் தோன்றலாம். தலையில் கைக்குட்டையை கட்டி அதன் மீது கவசம் அணிந்தால் இந்த பிரச்சனை ஏற்படாது.