80 வயதிலும் மாஸ் காட்டிய சில்வர் சீனுவாசன் தாத்தாவின் திருடும் டெக்னிக் இதுதான்!
80 வயதிலும் மாஸ் காட்டிய சில்வர் சீனுவாசன் தாத்தாவின் திருடும் டெக்னிக் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Recommended Video
சென்னை: சில்வர் சீனுவாசன் தாத்தா மாட்டிக் கொள்ளாமல் திருடியது எப்படி என்பது குறித்த பரபர தகவல்கள் வெளியாகியுள்ளன.
50 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் கொடி கட்டி பறந்தவர் சில்வர் சீனுவாசன் தாத்தா. இவர் மீது 224 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது திருடும் ஸ்டைலே வித்தியாசமானது.
இவர் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் கவனத்தை திசைத் திருப்பி நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு தப்பி விடுவார்.
பஞ்ச பாட்டு
ஜோதிடம், ஜாதகம் மற்றும் பரிகார பூஜை என தனது திருட்டில் நேர்த்தி காட்டியவர் சீனு தாத்தா. வசதியான வீடுகளுக்கு ஜாதகம் பார்ப்பது போன்றும் தோஷம் கழிப்பது போன்றும் செல்லும் சீனு தாத்தா அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு தனக்கு யாருமில்லை என்றும் தங்க இடமும் இல்லை என்றும் பஞ்ச பாட்டு பாடுவார்.
உண்ட வீட்டுக்கே இரண்டகம்
இதை நம்பும் இல்லத்தரசிகள் அவருக்கு உணவு வழங்கி தங்குவதற்கு இடமும் கொடுப்பர். அவ்வாறு வீட்டின் பின்புறம், கார் பார்க்கிங் என கொடுக்கும் இடத்தில் தங்கிவிடுவார் சீனுவாசன். பகல், இரவில் அப்பாவி போல் காட்சியளிக்கும் தாத்தா, அதிகாலை 3 மணி அளவில் தனது கைவரிசையை காண்பிப்பார்.
வயதான தோற்றம்
வீட்டை நன்றாக நோட்டமிட்டு அதிகாலை 3 மணி அளவில் பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள் செல்லும் தாத்தா பூஜை அறையில் இருக்கும் தங்கம், வெள்ளி நகைகளை திருடிக் கொண்டு தப்பி விடுவார். இவரது வயதான தோற்றத்தால் யாருக்கும் இவர் மீது சந்தேகம் வந்ததில்லை.
சில்வர் அடைமொழி ஏன்
80 வயதிலும் அசராமல் நகைகளை திருடுவதில் வல்லவர் என்று காவல் துறையினரே இவருக்கு சர்ட்டிபிகேட் கொடுக்கின்றனர். வெள்ளி பொருட்களையே அதிகம் திருடியதால் காவல் துறையினர் இவரது பெயருடன் சில்வர் என்ற அடைமொழியை சேர்த்தனர்.
நகை திருட முயற்சித்த போது சிக்கிய சில்வர்
சென்னை சங்கர் நகரில் தோஷம் கழிப்பதாக கூறி நகையை திருட முயன்ற போது சீனுவாசனை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயிலாப்பூரில் உள்ள வீட்டில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.