தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது இவர்கள்தான்.. போலீஸ் கூறும் புதுத் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது இருவர் என போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு அந்த மாவட்ட துணை வட்டாட்சியர்கள் இருவர் உத்தரவிட்டதாக போலீஸார் புதிய தகவலை கூறுகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்தின் போது 144 தடையை மீறி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், மாணவ, மாணவியர் என 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது.
முதல் தகவல் அறிக்கை வெளியீடு
துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்த தகவல்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை நகலை போலீஸார் வெளியிட்டனர். இதில் தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (தேர்தல்) சேகர், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டது முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யார் உத்தரவு
திரேஸ்புரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கண்ணன் உத்தரவிட்டார். ஆட்சியர் அலுவலக பகுதியில் சிப்காட் ஆய்வாளர் அரிகரனுக்கு சேகர் உத்தரவிட்டுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர். பொறுமையாக இருந்தால் பெரும் சேதம் ஏற்படும் சூழல் நிலவியதால் துப்பாக்கியை பிரயோகிக்க உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் சேகர் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சொத்துகள் சேதம்
அவர் மேலும் கூறுகையில் கலவரக்காரர்களால் ஆட்சியர் அலுவலக சொத்துகளுக்கு சேதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உத்தரவுக்கு பிறகு வன்முறை கும்பலை கலைக்க துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது என்றார் சேகர். திரேஸ்புரத்தில் மீண்டும் வன்முறை ஏற்படாமல் இருக்கவே துப்பாக்கிச் சூடு என முதல் தகவல் அறிக்கையில் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் கண்ணீர் புகைகுண்டு, லத்தி, ரப்பர் தோட்டா ஆகியவற்றால் கும்பலை கலைக்க முற்பட்டும் வன்முறை தொடர்ந்தது.
3 முறை வானத்தை நோக்கி...
10,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத கும்பல் பயங்கர ஆயுதங்களால் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என எச்சரித்தும் வன்முறை தொடர்ந்தது. மேலும் 3 முறை வானத்தை நோக்கி சுட்டும் போராட்டக்காரர்கள் கலையவில்லை. திரேஸ்புரத்தில் 500 பேர் பெட்ரோல் குண்டு அரிவாளுடன் முற்றுகையிட வந்தனர். 100 பெண்கள் உள்பட 500 பேர் காவலர் குடியிருப்புக்குள் நுழைய முயன்றனர் என்று கண்ணன் எஃப்ஐஆரில் தெரிவித்துள்ளார்.