ஆக. 15 முதல் சன்டேன்னா பேசுங்க பேசிகிட்டே இருங்க, கட்டணமே கிடையாது: பி.எஸ்.என்.எல்.
சென்னை: சுதந்திர தினம் முதல் ஞாயிறுதோறும் லேண்ட்லைன் மூலம் செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை என பி.எஸ்.என்.எல். அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒரு காலத்தில் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் இல்லாத வீடுகள் இல்லை. செல்போன்களின் வரவால் லேண்ட்லைன் போனின் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது. அனைவரும் செல்போனும் கையுமாக இருக்கும்போது யார் லேண்ட்லைன் போனை தேடுவது.
இந்நிலையில் லேண்ட்லைன் போன் பயன்பாட்டை ஊக்குவிக்க பி.எஸ்.என்.எல். புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது இனி ஞாயிறுதோறும் லேண்ட்லைன் மூலம் செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது.
இந்த சலுகை சுதந்திர தினமான வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை லேண்ட்லைன் மூலம் செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை என்ற சலுகை ஏற்கனவே அமலில் உள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்படும் சலுகையுடன் பழைய சலுகையும் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.