கூவத்தூர் 1, கூவத்தூர் 2... விரலை விட்டு எண்ணிப் பாருங்க, 6 வித்தியாசம் இருக்கு!
அதிமுக ஆட்சிக் காலத்தில் 6 மாதத்திற்குள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள கூவத்தூர் 1, கூவத்தூர் 2 சம்பவங்களுக்கு இடையில் இருக்கும் 6 வித்தியாசங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாமா.
சென்னை : அதிமுக ஆட்சியில் கட்சி யாருக்கு என்ற போட்டியால் 6 மாதத்திற்குள் கூத்தூர் சீசன் 2க்கு போய் விட்டனர். கூவத்தூர் 1, கூவத்தூர் 2 இரண்டுக்கும் உள்ள 6 வித்தியாசங்கள் என்னெவென்று பார்க்கலாமா.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் சசிகலாவின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. கட்சியை ஜெயலலிதா ராணுவ கட்டுப்பாட்டுடன் 30 ஆண்டுகள் வழிநடத்தியது போல நானும் கட்சியை வழிநடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று சசிகலா கட்சியினரிடம் தெரிவித்தார்.
ஆனால் பிப்ரவரி 7ம் தேதி தியானம் செய்து விட்டு மௌனம் கலைத்த ஓ.பன்னீர்செல்வத்தால் ராணுவ கட்டுப்பாட்டில் விரிசல் ஏற்பட்டது. என்றாலும் தன் கட்டுப்பாட்டில் 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் தங்கவைத்து தொடர்ந்து தன்னுடைய சர்வாதிகாரத்தை நிலைநாட்டப்பார்த்தார் சசிகலா, இந்தக் கதைகள் எல்லாம் நாடறிந்த விஷயங்களே.
6 வித்தியாசங்கள்
ஆனால் 6 மாதத்தில் மீண்டும் ஒரு கூவத்தூர் பார்ட் 2 சம்பவம் அரங்கேறி வருகிறது. கூவத்தூர் 1, கூவத்தூர் 2 இரண்டுக்கும் குறைந்தபட்சம் 6 வித்தியாசங்களை விரல் விட்டு சொல்லிவிடலாம்.
ராணுவ கட்டுப்பாடு
கூவத்தூர் 1ல் 122 எம்எல்ஏக்களும் வெளிப்படையாக தங்கள் கருத்துகளை தெரிவிக்காமல் சசிகலாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு விடுதியில் தங்கியிருந்தனர். அது விடுதி என்பதைத் தாண்டி மிலிட்டரி குவார்டர்ஸ் போல உள்ளே யாரும் நுழைய முடியவில்லை. விடுதிக்குள் நடக்கும் காட்சிகளை பதிவு செய்வது என்பது சவாலான விஷயமாக இருந்தது.
மாறு வேடம்
சில வாரப் பத்திரிக்கையின் செய்தியாளர்கள் மாறுவேடத்தில் உள்ளே சென்று தகவல்களை திரட்டிய கூத்துகள் எல்லாம் கூட நடந்தன. அவ்வளவு ஏன் மதுரை எம்எல்ஏ சரவணனே மாறுவேடத்தில் கூவத்தூர் விடுதியில் இருந்து தப்பி வந்தார். அதே போல எந்த எம்எல்ஏ குறித்து பிரச்னை கிளம்புகிறதோ அந்த எம்எல்ஏ மட்டும் வெளியே வந்து தாங்கள் விரும்பித் தான் இங்கே இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு சென்றனர்.
14 நாட்கள் காத்திருப்பு
அதே போல சசிகலா ஆட்சியமைக்க ஆளுனரிடம் கடிதம் கொடுத்து ஏறத்தாழ 14 நாட்கள் காத்திருந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவிருந்ததால் கால தாமதம் செய்வதாக சொல்லப்பட்டது. அதற்கேற்ப தீர்ப்பும் வந்துவிட முதல்வராக பழனிசாமி நியமிக்கப்பட்டார். கூவத்தூர் 1 சம்பவத்தின் போது கட்சி தங்களிடம் இருக்கிறது என்ற தெம்போடு இருந்தனர் சசிகலா தரப்பினர்.
கட்டுப்பாடுகள் இல்லை
சரி இப்போ கூவத்தூர் 2வில் இருக்கும் வித்தியாசம் என்னவென்று பார்க்கலாமா. கூவத்தூர் 1ல் இருந்த 21 எம்எல்ஏக்கள் மட்டுமே தற்போது கூவத்தூர் 2 அதாவது புதுச்சேரி தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இங்கு ராணுவ கட்டுப்பாடு என்றெல்லாம் எதுவும் கிடையாது, மீடியாக்களுக்கும் கட்டுப்பாடுகள் இல்லை. விடுதியினுள்ளே எம்எல்ஏக்கள் வாக்கிங் போவது, விளையாடுவது, என்று ஜாலியாக இருப்பதை படம்பிடித்து ஒளிபரப்புகின்றன செய்தி சேனல்கள். இது தான் இன்றைய அரசியல், செய்தி பொழுதுபோக்காக உள்ளது.
கட்சி யாரிடம்?
எந்த கட்டுப்பாடுகளின்றி எம்எல்ஏக்கள் விரும்பிய நேரத்தில் வந்து தங்கள் மனதில் முதல்வர் பழனிசாமி தரப்பின் மீதுள்ள குற்றச்சாட்டுகளை அடுக்கி வைக்கின்றனர். இப்போதும் தங்களுக்குத் தான் கட்சியில் உரிமை இருப்பதாகச் சொல்லி நிர்வாகிகளை நீக்கி வருகிறார், எம்எல்ஏக்களை தங்கவைத்துள்ள துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன். ஆனால் கட்சித் தலைமையகம் இருப்பது முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டில் தான்.
9 நாட்களாக காத்திருப்பு
ஆளுநரை சந்தித்து முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேர் தனித்தனியே கடிதம் தந்துள்ளனர். ஆகஸ்ட் 22ம் தேதி அளிக்கப்பட்ட இந்த கடிதம் குறித்து 9 நாட்கள் கடந்த நிலையிலும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.