தீபாவளி.. சொந்த ஊர் செல்லும் மக்களால் சென்னையில் எங்கெங்கு இப்போ டிராஃபிக் ஜாம் தெரியுமா?
சென்னையில் தூரல் மழையும், பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்களின் படையெடுப்பாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதியில் எவ்வளவு டிராஃபிக் என்பதை தெரிஞ்சுக்கோங்க
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் பேருந்து நிலையங்களுக்கு கிளம்புவதற்காக அலுவலகத்தில் இருந்து அடித்து பிடித்து கிளம்பவதால் சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பட்டைய கிளப்புகிறது. எங்கெங்கு எவ்வளவ டிராஃபிக் என தெரிஞ்சுக்கோங்க.
நாளை மறுதினம் சொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகைக்காக மக்கள் தயாராகி வருகின்றனர். பணி நிமித்தமாக சென்னை வந்துள்ளவர்கள் குடும்பத்துடன் பண்டிகையை குதூகலிக்க சொந்த ஊர் புறப்பட்டு வருகின்றனர். பேருந்து டிக்கெட் கிடைக்காதவர்கள் இன்றே தங்களது பயணத்தை தொடங்குகின்றனர்.
வழக்கமாக திங்கட்கிழமைகளிலும், அதிலும் மழை நேரங்களில் சென்னை சாலைகளில் வாகனங்கள் நிரம்பி வழியும். இந்நிலையில் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்களால் போக்குவரத்து திணறி வருகிறது. ஷாப்பிங் கொண்டாட்டத்தில் இருக்கும் மக்களால் அசோக் நகரில் தொடங்கி, வடபழனி, கோடம்பாக்கம் வழியாக தியாகராய நகர் செல்லும் சாலைகள் வாகனங்களால் மிதக்கின்றன.
சென்ட்ரலில் இருந்து கீழ்ப்பாக்கம், அமைந்தகரை வழியாக கோயம்பேடு செல்லும் பாதையிலும் வாகன நெரிசல் இருப்பதால் அங்கும்போக்குவரத்து மெதுவாகவே இருக்கிறது. அண்ணா சாலையில் இருந்து அவ்வை சண்முகம் சாலை, வாலாஜா சாலை செல்லும் பாதையிலும் அதிக போக்குவரத்து இருக்கிறது. வாகன ஓட்டிகள் காத்திருந்து பொறுமையாகவே செல்லும் நிலையில் உள்ளனர்.
தெற்கு, வடக்கு உஸ்மான் சாலைகளிலும் போக்குவரத்து மெதுவாகவே நகர்ந்து வருகிறது. இதே போன்று திநகர், பாண்டி பஜார், தேனாம்பேட்டை வழியாக அண்ணா சாலை செல்லும் சாலைகளிலும் வாகனங்கள் நிரம்பி வழிகின்றன. அம்பத்தூர், வானகரம் மற்றும் சென்னைப் புறநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.
சென்னை நகர சாலைகளில் எந்தெந்த வீதிகளில் எவ்வளவு வாகன நெரிசல் என்பதை கூகுள் மேப்பில் பார்த்து டென்ஷன் இல்லாமல் பயணம் செய்யுங்கள். அல்லது https://wego.here.com/traffic/india/chennai?map=13.24209,80.71923,9,traffic இந்த இணையதளத்தில் டிராபிக் அப்டேட்டை தெரிந்து கொள்ளுங்கள்.