'என் அரசியல் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை.. இனி நடிகர் சங்கப் பொறுப்பே வேண்டாம்!'
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் முடிவால் எனது அரசியல் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இனி நடிகர் சங்கத்தில் எந்தப் பொறுப்பும் எனக்கு வேண்டாம், என்று சரத்குமார் கூறினார்.
நடிகர் சங்கம் - எஸ்பிஐ சினிமா ஒப்பந்தம் ரத்தானது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரத்குமாரிடம், "இந்த முடிவு உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?" என்று கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர், "நிச்சயம் கிடையாது. நான் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை, வெற்றி தோல்விகளைச் சந்தித்தவன். எல்லா சூழல்களிலும் ஒரே மாதிரி இருப்பவன். நடிகர் சங்க தேர்தல் என்பது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. என் மீது குற்றம் சுமத்தினார்கள்... அதை பொய்யாக்கி, மிஸ்டர் க்ளீனாக நிற்கிறேன். அதுதான் முக்கியம்," என்றார்.
"இனி நடிகர் சங்கத்தில் கவுரவப் பதவி ஏதேனும் தந்தால் ஏற்பீர்களா?"
"நிச்சயம் ஏற்க மாட்டேன். இனி எனக்கு நடிகர் சங்கத்தில் எந்தப் பொறுப்பும் எனக்கு வேண்டாம்!"
"வரும் காலத்தில் நடிகர் சங்கத்தில் போட்டியிடும் சூழல் வந்தால்...?"
"வந்தாலும், நான் நிச்சயம் போட்டியிட மாட்டேன். எனக்கு அந்த ஆசையும் இல்லை. உண்மையில் சங்கத்துக்கு கட்டடம் கட்ட வேண்டுமே என்பதற்காகவே நான் இந்த முறை நின்றேன்," என்றார்.