சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு – திருநங்கைக்கு வாய்ப்பு வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் பங்குபெற திருநங்கைக்கு அனுமதி வழங்கக் கோரி தேர்வாணையத்துக்கு ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கையான கே.பிரித்திகா யாசினி சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில்,
"நான் பிறக்கும்போது ஆணாக பிறந்தேன். பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி பட்டப்படிப்பில் என் பெயர் கே.பிரதீப்குமார் என்று சான்றிதழில் இருந்தது. பின்னர், என் உடலில் ஏற்பட்ட பெண்மை மாற்றத்தை தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தேன்.
எனக்கு திருநங்கை என்ற சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. வேலை கிடைக்காமல், பல நாட்கள் பட்டினியாக வாழ்ந்துள்ளேன். எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தால்தான் நல்லபடியாக வாழ முடியும்.
என் கல்விச் சான்றிதழில் பெயரை மாற்றக்கோரி கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்து, எழுத்து தேர்வுக்கு அழைப்பு கடிதம் வரும் என்று காத்திருந்தேன். 18 ஆம் தேதி சீருடைப் பணியாளர் இணையதளத்தில் பார்த்தபோது, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்குரிய கல்வித் தகுதி என்னிடம் உள்ளது. திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் என்னை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல, கல்வித் தகுதி, வயது ஆகிய விவரங்கள் சரியாக இல்லை என்று கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட சிலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பவானி உட்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதுகுறித்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மனுதாரர் பிரித்திகா யாசினி உட்பட மனுதாரர்களை எழுத்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவர்களுக்கான "ஹால் டிக்கெட்டை" வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 8 மணிக்கு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அதனை மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு சென்று தங்களது சான்றிதழ்கள் அனைத்தையும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழ்களை சரிபார்த்து அவர்களை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.