கடலோர மாவட்டங்களில் தாதுமணல் எடுக்கத் தடை நீடிப்பு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடலோர மாவட்டங்களில் தாதுமணல் அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கடலோர மாவட்டங்களில் தாது மணல் எடுப்பதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் தாதுமணல் எடுப்பது தொடர்பான வழக்கை 2013ம் ஆண்டு தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடர்ந்து தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு ஏற்றுமதி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆற்றுமணல் உரிமையாளர்கள் சார்பில், நீதிமன்ற தடை உத்தரவிற்கு முன்னர் எடுக்கப்பட்ட மணல்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் தற்போது மணல் எதுவும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மத்திய மாநில அரசுகளிடம் முறையாக அனுமதி பெற்றுதான் அதனை ஏற்றுமதி செய்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.
இந்த விசாரணையின் முடிவில், தமிழகம் முழுவதும் கடற்கரையில் தாது மணல் எடுக்க தடை உத்தரவை நீடித்தனர். மேலும், சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதை தடுக்க தனி குழு அமைக்க வேண்டும் என்றும் அந்த குழுக்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெறவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.