போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டு அறையில் டிரைவர், கண்டக்டர் பணிபுரிய ஹைகோர்ட் தடை
நெல்லை: அரசு போக்குவரத்துகழக கட்டுப்பாட்டு அறையில் டிரைவர், கண்டக்டர் பணிபுரிய ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. ஓட்டை உடைசலான பஸ்களில் போக்குவரத்து ஊழியர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் போக்குவரத்து கழகத்தில் சிலர் மாற்று பணி என்ற பெயரில் பொழுது போக்குவதையே வேலையாக கொண்டுள்ளனர். இவர்களை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. மாற்று பணி காரணமாக ஊழியர்கள் பலருக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. குறிப்பாக நடத்துனர் பணியில் சேருபவர்கள் 6 ஆண்டுகளில் முதுநிலை நடத்துனர் தேர்வு நிலையை அடைவர். பின்னர் 8 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு தேர்வு நிலை நடத்துனராக பதவி உயர்வு கிடைக்கும். இது பயண சீட்டு பரிசோதகருக்கு இணையான பதவி என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக இந்த பதவி உயர்வு பலருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இளம் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்களை விட வயதில் மூத்தவர்களுக்கு உத்தரவுகள் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து எம்பிளாய்மெண்ட் யூனியன் (ஜேடிஎல்எப்) செயலாளர் பிரம்மநாயகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை நீதிபதி பரந்தாமன் விசாரித்து போக்குவரத்து துறை கடடுப்பாட்டு பிரிவில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியாற்ற கூடாது என்றும் செல்டில்மெணட் பிரிவுப்படி ஓட்டுனர், நடத்துனர் கட்டுபாட்டு அறையில் பணியாற்ற வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.