எச் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது.. மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!
பெரியார் சிலை விவகாரத்தில் எச் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது என சென்னை ஹைகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை பெரியார் சிலை விவகாரத்தில் எச் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது என சென்னை ஹைகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அண்மையில் திரிபுராவில் ஆட்சியமைத்த பாஜக அங்கிருந்த லெனின் சிலைகளை அகற்றியது. இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதை போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து தனது அனுமதியின்றி தன்னுடைய அட்மின் போட்டுவிட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார் எச் ராஜா.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, தமிழை தந்தை பெரியார் சனியன் என்றார் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து தபெதிகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் எச் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழ்நாட்டுக்குள் எச்.ராஜா நுழையவும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதி ரமேஷ், தனி நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றார். எச் ராஜாவை மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அவகாசம் வழங்காமலேயே ஜெகதீசன் நீதிமன்றத்தை அனுகியுள்ளார் எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார்.