'பைக் ரேஸ் ' தடுக்க முடியவில்லையெனில் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பா? ஹைகோர்ட் சந்தேகம்
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி திருமுடிவாக்கம் பைபாஸ் சாலையில் பைக் ரேஸ் நடந்தது. இதில் பைக் ஓட்டிய டெல்லி கணேஷ் விபத்தில் சிக்கி பலியானார். இதில் கைதான வெற்றிவேல் பைக் ரேசில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரது சார்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சென்னையில் நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுத்து நிறுத்த கூட முடியாத நிலையில் உள்ள போலீசாரின் நிலை வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்.
சென்னையில், மெரினா கடற்கரை சாலை முதல் அடையாறு வரையிலும், துரைப்பாக்கம் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை என்று பல இடங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது. இதை தடுக்க போலீசாரால் முடியவில்லை என்றால், இந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் உள்ளதாக கொள்ள வேண்டி உள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெறும் சாலைகளில், போலீசார் கண்காணிப்பு கேமராவை பொருத்தினால், இந்த பந்தயத்தில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டு பிடிப்பதுடன், அவர்கள் மீதான வழக்கு விசாரணையின்போது இந்த வீடியோ காட்சி உதவிகரமாக இருக்கும்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் நபர்கள், தங்களது மோட்டார் சைக்கிளில் அதிக ஒலி வரும்படி செய்கின்றனர். இந்த ஒலியை மாற்றியமைக்கம் ‘மெக்கானிக்' மீதும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் உள்ள மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நீதிபதி வைத்தியநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.