வனத்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு சலுகை - பரீசிலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் போலீஸ் துறைக்கு வழங்குவதுபோல, வனத்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கும் வேலை வாய்ப்பில் 10 சதவீதம் சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த தீனதயாளமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் தேர்வாணையம், வனக்காவலர், கள உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பம் கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பில், 10 சதவீத இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும், 30 சதவீதம் பெண்களுக்கும், 5 சதவீதம் முன்னாள் ராணுவத்தினருக்கும், 10 சதவீதம் ஆதரவற்ற விதவைகளுக்கும், 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்த தேர்வில் நான் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என் தந்தை டி.துரைசாமி வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
தமிழக அரசு போலீஸ் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற போலீஸ்காரர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோரது வாரிசுகளுக்கு 10 சதவீதம் இடம் ஒதுக்கியுள்ளது. வனக்காவலர் பதவியும், சீருடை பணியை போன்று சவாலான பணிதான்.
என் தந்தை வனத்துறையில் பணியாற்றி கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளார். எனவே, இந்த தேர்வில், வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், பணியாற்றுபவர்கள் ஆகியோரது வாரிசுகளுக்கும், போலீஸ் துறையில் வழங்குவது போல 10 சதவீதம் சலுகைகள் வழங்கவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரித்து, மனுதாரரின் கோரிக்கையை தமிழக வனத்துறை முதன்மை செயலாளர், தமிழ்நாடு வனத்துறை சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவர், தலைமை வனபாதுகாவலர் ஆகியோர் 6 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.