தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிராக விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு... ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்
சென்னை : தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது...
தமிழக தலைமைத் தகவல் ஆணையராக கே.ராமானுஜம், தகவல் ஆணையர்களாக ஆர்.தட்சிணாமூர்த்தி, ஜி.முருகன் ஆகியோர் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் விவரம் உள்நோக்கத்தோடு எனக்கு தெரிவிக்கப்படவில்லை.
தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்வதற்கான குழு கூட்டத்தை அவசரகதியில் ரகசியமாக நடத்தி, ஆளுங்கட்சிக்கும் அரசுக்கும் செய்த சேவைக்கு அனுகூலம் செய்யும் வகையில் மேற்கண்ட 3 பேரை நியமித்துள்ளனர்.
எனவே, அவர்கள் எந்தத் தகுதி அடிப்படையில் இப்பதவியில் நீடிக்கின்றனர் என்று கோருவதுடன் 3 பேரும் அந்த பணியில் செயல்பட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ள வழக்குடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, விஜயகாந்த் மனுவுக்கு பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.