பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து.. ஹைகோர்ட் கிளை உத்தரவு
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை மரக்காணத்தில் 2013-ல் நடைபெற்ற மோதல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்றார்.
திருச்சி சிறையில் இருந்து 11.5.2013-ல் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது சிறை வாயிலில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்றார்.
இதற்காக திருச்சி அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ராமதாஸ் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அவரது பேச்சுக்கள் அவதூறு சட்டத்துக்கு உட்படாது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். பின்னர், திருச்சி அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.