தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சாட்டையை சுழற்றும் ஹைகோர்ட்.. சிக்கும் வட்டாட்சியர்கள்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 3 துணை தாசில்தார்களையும் வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 3 துணை தாசில்தார்களையும் வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ஆம் தேதி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
2 நாட்கள் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் அமுதநாதன்
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் முத்து அமுதநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை, தமிழக தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தாசில்தார்களுக்கு சிக்கல்
மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சேர்க்கப்பட்ட 3 தாசில்தாரர்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
துணை தாசில்தாரர்கள் சேகர், கண்ணன், கண்ணன் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் கருத்து
துப்பாக்கிச்சூடு என்பது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றும், என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.